search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவன் கையில் முத்திரை"

    பஞ்சாப் மாநிலத்தில் கல்விக் கட்டணம் கட்டாத மாணவனின் பெற்றோருக்கு நினைவூட்டும் வகையில், மாணவனின் கையில் முத்திரை குத்தி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    லூதியானா:

    பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள எஸ்டிஎன் எனும் தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஹர்ஸ்தீப் சிங். இவனது கல்விக் கட்டணம் செலுத்தப்படாததால், பள்ளி நிர்வாகம் தொடர்ந்து பெற்றோருக்கு நினைவுபடுத்தி உள்ளது. ஆனால் பெற்றோரால் உரிய நேரத்தில் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை.

    இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஹர்ஸ்தீப் சிங், தேர்வு எழுத சென்றபோதும் கல்விக் கட்டணத்தை கட்டும்படி கூறியுள்ளார். அத்துடன், பெற்றோருக்கு மீண்டும் நினைவுபடுத்தும் வகையில், மாணவனின் கையில் ரப்பர் ஸ்டாம்ப் மூலம் முத்திரை குத்தி உள்ளார். அதில், தயவு செய்து கல்விக் கட்டணத்தை செலுத்துங்கள் என எழுதப்பட்டிருந்தது. ஆசிரியரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

    பலமுறை கூறியும் கல்விக் கட்டணத்தை செலுத்தாததால் பெற்றோருக்கு மீண்டும் நினைவு படுத்தும் வகையில் இவ்வாறு செய்ததாகவும் அந்த ஆசிரியர் கூறியுள்ளார்.


    பள்ளி நிர்வாகம் மீது மாணவனின் தந்தை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். பரீட்சை ஹாலில் எதுவும் கொண்டு செல்லாத தன் மகன் கையில் ரப்பர் ஸ்டாம்ப் அடித்தது சரியல்ல என்று அவர் கூறினார். ஆனால், மாணவன் தந்தையை பள்ளி ஆசிரியர்கள் குறை கூறினர்.

    இதுபற்றி பள்ளி முதல்வர் கூறுகையில், “கல்வி கட்டணத்தை செலுத்தும்படி பலமுறை மாணவனின் டைரியில் ஆசிரியர் எழுதி அனுப்பி உள்ளார். ஆனால் மாணவன் அதை பெற்றோரிடம் காட்டவில்லை. இப்போது மாணவன் கேட்டுக்கொண்டதால்தான் ரப்பர் ஸ்டாம்ப் அடித்து அனுப்பியிருக்கிறார். வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் காட்டிவிட்டு, கையை கழுவி ரப்பர் ஸ்டாம்பை அழித்துவிடும்படி கூறி உள்ளார். ஆனால், அவனது பெற்றோர் பிரச்சனையை திசைதிருப்பிவிட்டனர்” என்றார்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், பள்ளி முதல்வரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உள்ளது.
    ×